Last Updated:
கர்நாடக சட்டப்பேரவையில் எம்எல்ஏ எம்.டி.கிருஷ்ணப்பா, பெண்களுக்கு மாத உதவித்தொகை போல் ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு புல் பாட்டில் மது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்குவதைப் போல, ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு ‘புல் பாட்டில்’ மது வழங்க வேண்டும் என்று கர்நாடகா சட்டப்பேரவையில் மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர் விடுத்த கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கர்நாடக சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், 36 ஆயிரத்து 500 கோடியாக இருக்கும் கலால் வரியை 40 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா, கடந்த ஆண்டில் கலால் வரியை மூன்று முறை அரசு உயர்த்தியுள்ளதாகக் கூறினார். இதனால், ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரியை மீண்டும் உயர்த்தினால் எப்படி 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் வினவினார்.
மக்கள் குடிப்பதை அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறிய அவர், மகளிருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைப் போன்று ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு புல் பாட்டில் மது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த எரிசக்தித் துறை அமைச்சர் ஜார்ஜ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தை செயல்படுத்தட்டும் என்று தெரிவித்தார்.
March 20, 2025 9:21 AM IST


