Last Updated:
மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை பாஜக இன்று வெளியிட்டது.
மேற்கு வங்கத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்திற்கு வரும் 23 மற்றும் 29 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
அதில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், மகளிருக்கும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், மாநில அரசு ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது.
பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், மாநிலத்தில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியமைந்ததும் பொது சிவில் சட்டம் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்தப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்திருக்கிறது.
மாடு கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படும், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் எய்ம்ஸ், ஐஐடி மற்றும் ஐ.ஐ.எம் அமைக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.


