Last Updated:
மந்திரவாதியின் தூண்டுதலால் 12 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியினரை குலைநடுங்க வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது உடல்நலமில்லாத மகனை காப்பாற்ற மந்திரவாதியின் தூண்டுதலால் 12 வயது மகளை நரபலி கொடுத்த சம்பவம் அப்பகுதியினரை குலைநடுங்க வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாக் பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான ரேஷ்மி தேவி. இவருக்கு 12 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். ரேஷ்மியின் கணவர் மஹாராஷ்ட்ராவில் வேலை செய்து வருகிறார். எப்போதாவது தான் ஊருக்கு வருவார். இதனால் ரேஷ்மிக்கு பீம்ராம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷ்மியின் மகனுக்கு சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷ்மி அங்கு பில்லி, சூனியம் செய்யக்கூடிய மந்திரவாதி சாந்தி தேவி என்பவரைச் சென்று பார்த்தார். உடனே சாந்தி தேவி, `மகனின் உடல்நிலை சரியாக வேண்டும் என்றால், ரேஷ்மியின் 12 வயது மகளை நரபலி கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மேலும், ரேஷ்மியின் மகளுக்கு தெய்வ கடாட்ஷம் இருப்பதால் அவரை பலி கொடுத்தால், மகனின் உடல் நலம்தேறுவதுடன், குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்றும் கூறி நம்ப வைத்திருக்கிறார்.
அதன்படி ரேஷ்மி தேவியும் அதற்கு சம்மதிக்க ராம் நவமியையொட்டி துர்காஷ்டமியில் தனது காதலன் பீம்ராமுடன் மகளை மந்திரவாதி சாந்தி தேவி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வழக்கமான பூஜைகள் நடந்தன. அதன் பிறகு அங்குள்ள மூங்கில் தோட்டத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ரேஷ்மி தனது மகளின் கால்களைப் பிடித்துக்கொள்ள, சிறுமி என்றும் பாராமல் பீம்ராம் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். அதன் பிறகு அருகில் இருந்த மந்திரவாதி சாந்தி தேவி சிறுமியின் ரத்தத்தால் சடங்குகள் செய்து உடலை அருகில் உள்ள மூங்கில் தோட்டத்தில் புதைத்துவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து ரேஷ்மி தனது மகளைக் காணவில்லை என்று கூறி, போலீஸில் புகார் கொடுத்து நடகமாடியிருக்கிறார். அதன்படி போலீஸார் தனிப்படை அமைத்து நடத்திய தேடுல் வேட்டையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தெரியவர அதிர்ந்து போயினர். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மற்றொரு குழந்தையின் உயிரைபறிக்க வேண்டியது ஏன்?. இதுபோன்று வேறு குழந்தைகள் ஏதேனும் பலி கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


