Last Updated:
பல ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தந்தை ஒருவர் ஒவ்வொரு ஆண்டும், மே மற்றும் ஜூன் மாதங்களில், டெல்லியில் இருந்து கார்கிலில் உள்ள டிராஸ் என்கிற பகுதிக்குப் பயணம் செய்கிறார்.
கார்கில் போரில் உயிர்நீத்த இந்தியாவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர், தனது வீரமரணத்திற்கு முன்பாக அவரது தந்தைக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அவரது இறுதிக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, தந்தையும், கர்னலுமான வீரேந்தர் தாப்பர் என்பவர் தனது மகன் வீரமரணம் அடைந்த டிராஸ் என்ற இடத்திற்கு ஆண்டுதோறும் பயணம் மேற்கொண்டு தனது மகன் மற்றும் மற்ற வீரர்களுக்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தி வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகனுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற தந்தை ஒருவர் ஒவ்வொரு ஆண்டும், மே மற்றும் ஜூன் மாதங்களில், டெல்லியில் இருந்து கார்கிலில் உள்ள டிராஸ் என்கிற பகுதிக்குப் பயணம் செய்கிறார். போரில் வீர மரணமடைந்த லெப்டினன்ட் விஜயந்த் தாப்பரின் தந்தையும், கர்னலுமான வீரேந்தர் தாப்பர், ஒவ்வொரு ஆண்டும் கார்கிலுக்குப் பயணிப்பதற்குப் பின்னால் இருக்கும் காரணம், ஒரு தந்தையின் அன்பு, பெருமை மற்றும் குறிப்பிடத்தக்க தந்தை-மகனின் பிணைப்பைக் காட்டுகிறது.
1999 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், இந்திய எல்லைக்குள் ஊடுருவி முக்கிய இடங்களை ஆக்கிரமித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா கார்கில் போரை நடத்தியது. இப்பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற இந்திய வீரர்கள் துணிச்சலுடன் போராடினர். கர்னல் வீரேந்தர் தாப்பரின் மகனும், 22 வயதான லெப்டினன்ட்டுமான விஜயந்த் தாப்பர் உட்பட 527 இந்திய வீரர்கள் இந்தப் போரில் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கிடையே, லெப்டினன்ட் விஜயந்த் தாப்பர் தனது இறுதிக் கடிதத்தில், தானும் தனது தோழர்களும் துணிச்சலுடன் நின்று தங்கள் உயிரைத் தியாகம் செய்த இடத்தைப் பார்வையிடுமாறு தனது தந்தையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கர்னல் வீரேந்தர் தாப்பர் ஒவ்வொரு ஆண்டும் டிராஸுக்குச் சென்று தனது மகனின் தைரியம் மற்றும் தியாகத்திற்கு மரியாதையும், அஞ்சலியும் செலுத்தி வருகிறார்.
தி டெலிகிராப்பின் அறிக்கையின்படி, லெப்டினன்ட் விஜயந்த் தாப்பர் தனது பெற்றோரிடம் ஒரு அனாதை இல்லத்திற்கு நன்கொடை அளிக்கவும், ருக்சனா என்கிற இளம் பெண்ணுக்குத் தொடர்ந்து ரூ.50 வழங்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், தனது மகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஐஜிஐ விமான நிலையத்தில் நிற்கும் கர்னல் வீரேந்தர் தாப்பரின் படமும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல நெட்டிசன்கள், இந்தப் பதிவில் இது ஒரு நெகிழ்ச்சியான தருணம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
“மிகவும் உருக்கமான விஷயம், அந்தத் தந்தைக்கு எனது மரியாதை” என்று யூசர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். மற்றொருவர், “நம் நாட்டின் ஆயுதப் படைகள் ஒரு காலத்தில் மிகவும் மதிப்பிற்குரியவையாக இருந்தது. இது போன்ற கதைகள், நம்மைப் பாதுகாக்க உண்மையிலேயே அவர்கள் ஆற்றிய உயிர் தியாகத்திற்கு ஒரு சான்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
June 02, 2025 9:04 PM IST


