
Last Updated:
ஆந்திராவில் கஞ்சா கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவரம் வழியாக கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அலெர்டான போலீசார், கிருஷ்ணவரம் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்கி விசாரணை நடத்த ஆயத்தமாகினர். உள்ளே இருக்கும் கஞ்சாவை போலீசார் மோப்பம் பிடித்ததை உணர்ந்த கடத்தல்காரர்கள், காரை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முற்பட்டனர். தடுப்பு வளையத்தை தாண்டி காரை வேகமாக ஓட்டிய கடத்தல்காரர்கள், எதிரே நின்றிருந்த காவலர்களை இடித்து தூக்கி வீசிவிட்டு மின்னல் வேகத்தில் விரைந்தனர்.
போலீஸ்காரர்கள் மீது காரை ஏற்றிவிட்டு தப்பியோடிய கடத்தல்காரர்களை பிடிக்க, அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் பறந்தது. இருந்த போதும் தொடர்ந்து கடத்தல்காரர்களின் காரை சேஸிங் செய்த போலீசார், ஜிலுகுமல்லி அருகே மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கார் மோதிய விபத்தில் இரு காவலர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதுடன், கார் மூலம் போலீசாரை இடித்து தள்ளியதால் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடத்தல்காரர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#JUSTIN
சுங்கச்சாவடியில் காவலர்கள் மீது காரை ஏற்றி தப்பியோடிய கஞ்சா கடத்தல் கும்பல்..
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..#Krishnavaram #AndhraPradesh #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/6cdoGMeLuO
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 2, 2025
கஞ்சா கடத்தல் கும்பலை தடுக்க முயன்ற போலீஸ்காரர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம், ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
January 02, 2025 9:33 PM IST

