கோலாலம்பூர் :
மலேசியர்களுக்கு மட்டுமே உரித்தான மானிய விலை பெட்ரோலை முறைகேடாகப் பெற முயன்ற 64 வயது முதியவர் லோங் சா கோ (Long Sa Kow) என்பவருக்குக் கூலாய் (Kulai) நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, ஜாலான் ஜோகூர் பாரு-ஆயர் ஈத்தாம் சாலையில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், சில்வர் நிற வோக்ஸ்வேகன் (Volkswagen Jetta) கார் ஒன்று RON95 பெட்ரோலை நிரப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த காரின் உண்மையான சிங்கப்பூர் பதிவு எண் SLJ 8967 M. ஆனால், அதில் உள்ள ‘S’ மற்றும் ‘M’ ஆகிய எழுத்துக்களை மறைத்து, அது ஒரு மலேசிய வாகனத்தைப் போலத் தோற்றமளிக்கும் வகையில் LJ 8967 என்று மாற்றியமைத்திருந்தார்.
அங்கிருந்த ஒருவர் இதை வீடியோ எடுத்து தட்டிக் கேட்டபோது, ஓட்டுநர் தான் ஒரு மலேசியர் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். பின்னர் போலீசார் அவரைச் சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர்.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 108(3)(e)-இன் கீழ் (தவறான பதிவு எண்ணைப் பயன்படுத்துதல்) அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
லோங் சா கோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேஜிஸ்திரேட் ஆர். சாலினி அவருக்கு RM9,000 அபராதம் விதித்தார். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 9 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் எஸ். திவ்யா வாதிடுகையில், “இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. மலேசியர்களுக்குச் சேர வேண்டிய சலுகைகளை முறைகேடாக அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல். மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட நபர் தான் ஒரு ஓய்வு பெற்றவர் என்றும், தனக்கு நிலையான வருமானம் இல்லை என்றும் கூறி குறைந்தபட்ச அபராதம் கேட்டார். இருப்பினும், அவரது ஏமாற்று வேலையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது.




