உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத விநியோகத்தை நிறுத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான சர்வதேசக் கூட்டணியில் இணையுமாறு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகளால் நிதியளிக்கப்படும் உக்ரைனுக்கான நேட்டோவின் (NATO) முன்னுரிமை ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் (PURL initiative) கீழ் வழங்கப்படும் அமெரிக்க இராணுவத் தளவாட விநியோகங்களை நிறுத்திவைப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
இராணுவத் தளங்கள்
ஈரான் மீதான போரினால் மூடப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் தங்களது கடற்படைகளை அனுப்ப மறுத்ததே ட்ரம்பின் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio), நேட்டோ நட்பு நாடுகளின் போக்கு மிக்க ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் ஈரான் மீதான போருக்குத் தங்களது வான்பரப்பையும் இராணுவத் தளங்களையும் பயன்படுத்த அனுமதி மறுத்ததை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவிற்குத் தேவைப்படும் நேரத்தில் உதவாத ஒரு கூட்டணியில் நாம் ஏன் இருக்க வேண்டும்? எனக் கேள்வி எழுப்பிய ரூபியோ, இந்தப் போர் முடிந்த பிறகு நேட்டோவின் மதிப்பு மற்றும் அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவு குறித்து வாஷிங்டன் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோ என்பது ஒரு ஒருதலைப்பட்சமான பாதையாக இருக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
