ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு முக்கிய உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இந்தநிலையில், இன்று (01.04.2026) இரவு 9 மணிக்கு (இலங்கை/இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6:30 மணி அளவில்) அவர் தனது உரையை நிகழ்த்தவுள்ளார்.
இந்தப் போர் தொடங்கிய பிறகு அவர் ஆற்றும் முதல் பிரைம்-டைம் (Prime-time) உரை இது என்பதால் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கியப் போர்
வழக்கமாக முக்கியப் போர்களின் தொடக்கத்திலேயே ஜனாதிபதிகள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மரபு என்றாலும் ட்ரம்ப் ஒரு மாதம் கழித்து இந்த உரையை நிகழ்த்துவது அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
ஈரான் மீதான போர் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கவலைகள் மற்றும் ட்ரம்பின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவதால் அவர் பெரும் அரசியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்தநிலையில், சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
அதேசமயம் அவரது செயல்பாடுகளை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீதத்தைத் தாண்டியுள்ளதுடன் குறிப்பாகச் சுயேச்சை வாக்காளர்கள் இந்தப் போருக்கு எதிராகத் திரும்பியுள்ளது ட்ரம்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
புதிய உத்திகள்
ஈரான் ஏற்கனவே போர் நிறுத்தத்தைக் கோரியுள்ளதாக ட்ரம்ப் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.
இருப்பினும் ஈரான் மீது அவர் விதித்துள்ள மிகக் கடுமையான நிபந்தனைகள் காரணமாக இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் இன்னும் பெரும் நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது.

அத்தோடு பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஈரான் மீதான இந்தத் தாக்குதலுக்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் இன்றைய உரையில் போர் குறித்த தனது அடுத்தகட்ட முடிவுகளை ட்ரம்ப் அறிவிப்பாரா அல்லது மக்களின் அதிருப்தியைச் சமாளிக்கப் புதிய உத்திகளைக் கையாளுவாரா என்பது தொடர்பில் பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
