Last Updated:
விபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது உலகம் முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாங்கள் இயக்கும் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான விமானம், மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த நிலையில், அதிலிருந்தவர்களும் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 260-ஆக அதிகரித்தது. இது உலகம் முழுமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விசாரணை செய்யும் நாடு, விமான விபத்து நடந்த 30 நாட்களுக்குள் ஏதேனும் கண்டுபிடிப்புகளுடன் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கடந்த 12 ஆம் தேதி வெளியானது. விமானம் விபத்துக்குள்ளானதற்கு, இன்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதே காரணம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஜூலை 21 ஆம் தேதிக்குள் ஆய்வுப் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் அனைத்து விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
அதன்படி, ஏர் இந்தியா வசம் உள்ள போயிங் 787 விமானங்களில் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
July 17, 2025 7:56 AM IST

