Last Updated:
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர். டிரம்ப், அன்டோனியோ குட்டரெஸ், திரவுபதி முர்மு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்கு தொடங்கியது. புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த போப் உடல் சவப்பெட்டிக்குள் வைத்து மூடப்பட்டது. புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்குகளுக்கு பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் அடக்க நிகழ்வு 15 மொழிகளில் நேரலை செய்யப்பட்டது.

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இதுவரை 54 நாடுகளின் தலைவர்கள் உட்பட 164 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாக வாடிகன் அறிவித்துள்ளது.
April 26, 2025 10:02 PM IST


