Last Updated:
Pope francis | போப் பிரான்சிஸ் உடலுக்கு வழிநெடூக்கிலும் சுமார் 4 லட்சம் பேர் திரண்டு பிரியா விடை கொடுத்தனர்.
போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு நிகழ்வில் சுமார் இரண்டரை லட்சம் பேர் திரண்டதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாடிகனின் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸின் உடல் இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டது. வழக்கமாக போப்களின் பூத உடல், உயரக மரங்களால் ஆன 3 அடுக்கு சவப்பெட்டியில் தான் அடக்கம் செய்யப்படும். ஆனால், போப் பிரான்சிஸின் விருப்பப்படி எளிமையான ஓரடுக்கு சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது. அதை சுற்றிலும் துத்தநாகமும் இடம்பெற்றுள்ளது.
இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து அப்பம் வழங்கப்பட்டது. பின்னர் போப் பிரான்சிஸின் உடலுக்கு புனித நீர் தெளித்து கார்டினல் கியோவன்னி படிஸ்டா இறுதிச் சடங்குகளை நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ALSO READ | Pope Francis: மதங்களைக் கடந்த மனிதநேயம்… போப் பிரான்சிஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்…
சுமார் இரண்டரை லட்சம் பேர் பங்கேற்று போப் பிரான்சிஸை எண்ணி மனமுருகி பிரார்த்தனை மேற்கொண்டனர். போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கிற்கு இடையே செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தினர். அவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோனும் சந்தித்து பேசினர்.
இதே போன்று சென்னையிலும் மறைந்த போப் பிரான்சிஸ்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதாவது தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஏறத்தாழ 3 மணி நேரத்திற்கும் மேலாக செதுக்கப்பட்ட போப் பிரான்சிஸின் மணற்சிற்பத்தை திரளான மக்கள் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, ரோம் நகரில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவில் போப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போப்-ஆக இருந்தவர்களின் உடல்கள் வாடிகனில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக போப் பிரான்சிஸின் உடல் வாடிகனுக்கு வெளியே ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனித சான்டா மரியா பசிலிக்காவிற்கு போப் பிரான்சிஸின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடூக்கிலும் சுமார் 4 லட்சம் பேர் திரண்டு பிரியா விடை கொடுத்தனர். பின்னர், புனித சான்டா மரியா பசிலிக்காவில் மூடிய அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 100 ஆண்டுகளில் முதல் முறையாக வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட்டது.
April 27, 2025 7:08 AM IST


