Last Updated:
ஆந்திரா குண்டூர் ரவுக்குபாள்யம் இல் மது போதையில் இருந்த வெங்கடேஸ்வர ராவ் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட வழக்கில் திருப்பதம்மா உட்பட 4 பேர் கைது.
ஆந்திராவில் மது போதைக்கு அடிமையான கணவனை கட்டிய மனைவியே உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ரவுக்குபாள்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ராவ். இவருக்கு, திருப்பதம்மா என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வெங்கடேஸ்வர ராவ் கூலி வேலை செய்து வந்தபோதும், கிடைக்கிற வருமானத்தில் தம்பதி இருவரும் நிறைவான இல்லற வாழ்க்கையை தொடர்ந்தனர். திடீரென மதுபோதைக்கு அடிமையான வெங்கடேஸ்வரா, வேலைக்கு செல்லாமல் வெட்டியாக ஊர் சுற்றியுள்ளார்.
மேலும் குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சண்டையிட்டு துன்புறுத்தியுள்ளார். அதை பொறுத்துக் கொண்ட போதும், நடத்தையில் சந்தேகம் கொண்டு அடித்து உதைத்ததால் பொங்கி எழுந்துள்ளார். இருப்பினும் கணவனை எப்படியாவது திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதற்காக, ஊரில் இருந்து உறவினர்களை பஞ்சாயத்து பேசுவதற்கு திருப்பதம்மா வரவழைத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த உறவினர்கள் வெங்கடேஸ்வராவிடம் குடிப்பழக்கத்தை கைவிட்டு, பிழைக்க வழி தேடும் படி அறிவுரை கூறியுள்ளனர். ஏற்கனவே மது போதையில் இருந்த வெங்கடேஸ்வராவுக்கு, ஊராரின் உபதேசத்தை கேட்டு கோபம் கொப்பளித்துள்ளது. உடனே, நீங்கள் யார் தனக்கு அறிவுரை கூறுவது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஏக வசனம் பேசியுள்ளார்.
வெங்கடேஸ்வராவுக்கு இப்படி சொன்னால் புரியாது என்ற முடிவுக்கு வந்த உறவினர்கள், நாலு போடு போட்டால் தான் சரி வரும் என்று கருதியுள்ளனர். இதனால், வீட்டை பூட்டிக் கொண்டு அவரை வசமாக தாக்கியுள்ளனர். மது போதையில் இருந்தவரை கண்மூடித்தனமாக தாக்கியதில் சுயநினைவை இழந்தவர், அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்து பதறிப்போன உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கியுள்ளனர்.
பின்னர், திருப்பதம்மாவுடன் பேசி சமாதானம் செய்த உறவினர்கள், உடலை ஊருக்கு வெளியே எடுத்து சென்று ஒரு பெரிய பாறாங்கல்லை கட்டி ஏரியில் வீசியுள்ளனர். இந்த நிலையில் ஏரியில் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் வெங்கடேஸ்வர ராவ் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவரின் மனைவி திருப்பதம்மா மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரித்ததும், நடந்த அத்தனையையும் அப்படியே ஒன்றுவிடாமல் வாக்குமூலமாக அளித்துள்ளார். பின்னர் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், திருப்பதம்மா, அவருடைய உறவினர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மது போதைக்கு அடிமையான கணவருக்கு அறிவுரை கூறி திருத்த வந்த உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை, ஏரியில் வீசிய வழக்கில் மனைவியுடன் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


