சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபருடன் தாம் பேசியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மறுத்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இருந்ததாகவும், அவரோடு 53 முறை பேசியுள்ளதாகவும் அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
தொலைபேசி எண்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள முஜிபுர் ரஹ்மான், தாம் எந்தவொரு சந்தேக நபருடனும் பேசவில்லை என்றும், இது தொடர்பாக ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய சிம் கார்டு, மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த தனது கட்சியின் பெண் ஆதரவாளர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் இதற்கு முன்னர் அந்த எண்ணைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்துள்ளார்.
ஒருபோதும் பேசியதே இல்லை
முஜிபுர் ரஹ்மானின் கூற்றுப்படி, அந்தப் பெண் பின்னர் இந்த சிம் கார்டை தனது உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த உறவினர் போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் நிலையில், பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சில ஊடகங்கள் கூறுவதைப் போல சிறையில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அந்த எண்ணில் இருந்து தனக்கு வந்த அனைத்து அழைப்புகளும், சம்பந்தப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னரே வந்தவை என்றும், அந்த சந்தேக நபரைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதோடு அவரிடம் தான் ஒருபோதும் பேசியதே இல்லை என்றும் ரஹ்மான் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.. |

