Last Updated:
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல நவீன போக்குவரத்துத் தீர்வுகளைச் செயல்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் நகரப் பகுதி போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக “பறக்கும் பேருந்துகள்” (Flying Buses) மற்றும் வான்வழிப் பாட் (Aerial Pod) போக்குவரத்து முறைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற லக்னோ-கான்பூர் விரைவுச்சாலைத் தொடக்க விழாவில் பேசிய அவர், இந்த அதிநவீன போக்குவரத்துத் திட்டங்கள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார். இந்த வான்வழி பொதுப்போக்குவரத்துத் திட்டம் இந்தியாவின் உள்கட்டமைப்பில் அடுத்த முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கான துல்லியமான தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பல நவீன போக்குவரத்துத் தீர்வுகளைச் செயல்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது.
தலைநகர் டெல்லியில் தவுலா குவான் முதல் மானேசர் வரையிலான வழித்தடங்களில் உள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த ஸ்கை டிரான்சிட் பாட் சிஸ்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. நாக்பூர் போன்ற நகரங்களில் 135 பேர் அமரக்கூடிய எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் மின்சாரப் பேருந்துகளின் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியவை மற்றும் வெறும் 30 வினாடிகளில் சார்ஜ் ஆகும் திறன் கொண்டவை.
மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்கள் மற்றும் எளிதில் செல்ல முடியாத மலைப்பகுதிகளின் போக்குவரத்தை மேம்படுத்த ஹைப்பர்லூப் நெட்வொர்க்குகள், ஃபனிகுலர் ரயில்வே மற்றும் கேபிள் பேருந்துகள் போன்ற பல திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
இதே நிகழ்வில், E20 (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) எரிபொருள் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், இன்ஜின் சேதமடைவதாகவும் சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அமைச்சர் கட்கரி கடும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எத்தனால் பயன்பாட்டினால் இன்ஜின் பாதிக்கப்படுகிறது என்பதை விமர்சகர்கள் நிரூபிக்க சவால் விடுத்த அவர், பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வருவதைச் சுட்டிக்காட்டினார். எத்தனாலால்தான் இன்ஜின் கெடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப் பிரச்சாரம் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
எத்தனாலின் குறைந்த ஆற்றல் அடர்த்தி காரணமாக மைலேஜ் சற்றே குறையலாம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், ஆனால் அது இன்ஜினைப் பாதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி – புதிய திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு


