கற்பிட்டி – கண்டக்குழி குடாப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் அவரது 7 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கற்பிட்டி கண்டக்குழி குடா வீதியில் மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகனும் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகப் பின்னால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்துள்ளது. இதனைக் கண்டு பதற்றமடைந்த தந்தை மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தியுள்ளார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியோரமிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திய துஷ்மந்த ராஜபக்ச (வயது 40) மற்றும் அவரது 7 வயது மகன் இருவரும் உடனடியாகக் கற்பிட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், விபத்து நடந்த தருணத்தில் இருவரும் தலைக்கவசம் அணியவில்லை என்பதும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் புத்தளம் தள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கற்பிட்டிப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
எம்.எச்.எம். சியாஜ்


