Last Updated:
கர்நாடகாவில் பாதகானஹள்ளி கிராமத்தில் லாவண்யா, தனது இரு குழந்தைகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இரு குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாதகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஜெயண்ணா – லாவண்யா. இந்தத் தம்பதிக்கு 10 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். ஜெயண்ணா கிடைத்த வேலைக்குச் சென்று வந்துள்ளார். இரு பெண் குழந்தைகள் உள்ளதால் அவர்களை நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டு, நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று லாவண்யா, தனது கணவரிடம் கூறியுள்ளார்.
எனவே, விமான நிலையத்துக்கு கார் ஓட்டுநராகச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார். அதைக் காதில் வாங்காத ஜெயண்ணா, கிடைத்த வேலைக்கும் செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலை தொடர்பாகக் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் முற்றிச் சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து, தனது இரண்டு மகள்களையும் உடன் அழைத்துக் கொண்டு லாவண்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவி மற்றும் மகள்கள் வீடு திரும்பாததால் ஜெயண்ணா மற்றும் குடும்பத்தினர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால் சிக்கபல்லாபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தாய் மற்றும் மகள்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள ஏரியில் மூன்று பேர் சடலமாகக் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனே விரைந்து சென்ற போலீசார் நீண்ட நேரத்திற்குப் போராடி உடல்களை மீட்டனர். தாய் மற்றும் இரு குழந்தைகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் கதறித் துடித்தது, அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
பின்னர், உடல்களைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூன்று பேர் தற்கொலைக்குக் குடும்பப் பிரச்சினைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
June 08, 2025 2:54 PM IST


