Last Updated:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாகக் கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று சமர்ப்பிக்கிறார். இதில், நாட்டின் பொருளாதார நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2025 – 26ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முதல் அமர்வு நிறைவு பெறும். பின்னர், இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையும் படிக்க: தனிநபர் கடன் – தொழில் கடனுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ள வக்ஃபு வாரியத் திருத்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இதே போன்று, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, வங்கிகள் சட்டத் திருத்த மசோதா உட்பட மொத்தம் 16 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதேசமயம், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
January 31, 2025 7:11 AM IST
பட்ஜெட் கூட்டத் தொடர் 2025: பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்


