ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவினால் ஹட்டன்–வெலியோயா வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தின் நடத்துனர் மீது தனியார் பேருந்தொன்றின் சாரதி மற்றும் நடத்துனரால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், காயமடைந்த நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் பி. டபிள்யூ. எம். பாலித பண்டார தெரிவிக்கையில், கடந்த 15ஆம் திகதி ஹட்டனிலிருந்து வெலியோயா நோக்கி பயணித்த தமது டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துநனர், ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் வைத்து தனியார் பேருந்தொன்றின் சாரதி மற்றும் நடத்துனரால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், தாக்குதலுக்குள்ளான நடத்துநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 16ஆம் திகதி மாலை மீண்டும் ஹட்டனிலிருந்து வெலியோயா நோக்கி பயணித்த லங்கம பேருந்தில் ஏறிய தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் உள்ளிட்ட சிலர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அச்சுறுத்தல் விடுத்ததாகவும் டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகவும் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தமது டிப்போவுக்குச் சொந்தமான மேலும் வேறு பேருந்துகளுக்கும் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாலித பண்டார, தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் லங்கம டிப்போவின் பேருந்துகளை வழித்தடங்களில் இயக்குவது சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எச்.எம்.சுதத் ஹேவா

