Last Updated:
உத்தர பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் பியூஷ் என்ற 11 ஆம் வகுப்பு மாணவனை தாத்தா ஷரண் சிங் நரபலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி தலையை துண்டித்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கரேலி பகுதியை சேர்ந்தவர் 17 வயதான பியூஷ். இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமாக பள்ளிக்கு சென்றவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதையடுத்து, மாணவரின் பெற்றோர் தனது மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, அங்குள்ள கால்வாயில் துண்டிக்கப்பட்ட தலையும், சற்று தொலைவில் உடல் பாகங்களும் கிடந்ததை கண்டு ஊரே உறைந்து போயுள்ளது. அவற்றை கைப்பற்றி விசாரித்ததில், காணாமல் போன சிறுவன் பியூஷின் உடல் பாகங்கள் என்பது தெரிந்ததும் பெற்றோரின் இதயம் நொறுங்கிப் போயுள்ளது.
பின்னர், விசாரணையை தீவிரப்படுத்தியதில் உடல் பாகங்களை துணியில் எடுத்து வந்து கால்வாயில் வீசியது அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஷரண் சிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர், கொலை செய்யப்பட்ட சிறுவன் பியூஷ் தாத்தாவின் உடன் பிறந்த தம்பி என்பது தெரியவந்தது. தாத்தா முறை கொண்ட ஷரண் சிங்கை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
ஷரண் கிங்கின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஷரண், மத்திரவாதி ஒருவரிடம் சென்று தனது குடும்பத்தில் அடுத்தது நிகழ்ந்த துயர சம்பவத்தை கூறியுள்ளார். இதில் இருந்து மீள்வதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா என்றும் கேட்டுள்ளார். அதற்கு, அந்த மத்திரவாதி உனது குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனை நரபலி கொடுத்தால், உன்னை பிடித்த பீடை எல்லாம் விலகும் என்று கூறியுள்ளார்.
அதைக் கேட்டு தலையாட்டிய ஷரண் சிங், மூட நம்பிக்கை என்பதை அறியாமல் கொலைபாதக செயலில் இறங்கியுள்ளார். இதையடுத்து, பள்ளிக்குசென்ற சிறுவன் பியூஷை கடத்தி தலையை துண்டித்து நரபலி கொடுத்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன், உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டி வீசியதாக கூறியதை கேட்டு போலீசாரே ஆடிப்போயுள்ளனர்.
தொடர்ந்து ஷரண் சிங்கை கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நரபலிக்கு காரணமாக இருந்த மத்திரவாதியையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். குடும்ப பிரச்சினைக்கு பரிகாரம் செய்வதாக நினைத்து மத்திரவாதியின் பேச்சைச் கேட்டு, 11 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி தலையை துண்டித்து, தாத்தாவே நரபலி கொடுத்த சம்பவம் உத்தரபிரதேசத்தை உலுக்கியுள்ளது.
August 29, 2025 6:54 PM IST


