Last Updated:
சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஜோதிடர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கேரளாவில் பேயோட்டுவதாகக் கூறி 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல ஜோதிடர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரீக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிடர் வி.எஸ். முராரி தந்திரி என்ற ராஜன்பாபு. புதூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து ஜோதிடம் பார்த்து வந்தார். மாந்திரிக கட்டம் மூலம் பில்லி சூனியம் இருந்தால் கட்ட அவிழ்க்கப்படும், பேய் ஓட்டப்படும் எனக்கூறி அதற்கான சில வேலைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் ராஜன்பாபுவை சந்தித்துள்ளார். அப்போது மகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறிக் கையெடுத்துக் கும்பிட்டுள்ளார். அதற்கு “இனி கவலைப்படாதீர்கள் நான் சரி செய்து விடுகிறேன்” எனக்கூறிய ராஜன், பூஜையில் வைத்து என்ன பிரச்சினை என பார்த்துச் சொல்கிறேன் இன்னொரு நாள் வாருங்கள் என சொல்லி அனுப்பி வைத்தார்.
பின்னர் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் சிறுமியுடன் அவரது தாய் மீண்டும் ஜோதிடர் வீட்டிற்குச் சென்றார். ஆனால் பிற்பகல் 3 மணியளவில்தான் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பேய் ஓட்டுவதாகக் கூறி ராஜன் பாபு அச்சிறுமியைத் தனியாக உள்ளே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகியும் அவள் வெளியே வராததால், தாய் உள்ளே சென்று பார்த்தபோது, தன் மகள் கண்ணீருடன் இருப்பதைக் கண்டு துடிதுடித்து போனார்.
அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறி கதறிய சிறுமியை வெளியே கூட்டிக்கொண்டு ஓடிய தாய், உறவினர்களுக்கு தெரியப்படுத்தி ஜோதிடரின் வீட்டை சூழ்ந்தனர். ஆனால் ராஜன்பாபு பின்வழியாக தப்பியோடித் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் தொடர்பாக புதூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் ஜோதிடர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரத்தின் மத்தியில் ராஜன் பாபு தப்பி ஓடிவிட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“பேயை விரட்டவேண்டும்.. ரூமுக்கு தனியாக வா..” தாயுடன் வந்த சிறுமியிடம் அத்துமீறிய பிரபல ஜோதிடர்..


