Last Updated:
உத்தரகாண்ட் மாநிலத்தில், பாஜக முன்னாள் தலைவரான அனாமிகா ஷர்மா தனது 13 வயது மகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் ஆண் நண்பர் மற்றும் அவரது உதவியாளர் மூலம் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனைவிட, இந்த விவகாரத்தில் கொடூரமான விஷயம், இந்த நிகழ்வு அந்தச் சிறுமியின் தாய் சம்மதத்துடன் நடந்திருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் பகுதியின் முன்னாள் பாஜக மகளிர் அணித் தலைவராகச் செயல்பட்டு வந்தவர் அனாமிகா ஷர்மா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரின் 13 வயது மகள் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். அனாமிகா ஷர்மாவுக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான சுமித் பட்வால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், சுமித் பட்வாலின் ஓட்டலிலேயே தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அனாமிகாவின் அனுமதியோடு, அவரது ஆண் நண்பர் சுமித் பட்வால் அவரின் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுமட்டுமின்றி, சுமித் பட்வாலின் உதவியாளரான சுபம் என்பவரும் அந்தச் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் அந்தச் சிறுமியின் தாய் சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலுமே சிறுமியைப் பல முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் சிறுமியின் தந்தையைக் கொன்றுவிடுவோம் எனவும் அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத சிறுமி தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை உடனடியாகக் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் அனாமிகா ஷர்மா மற்றும் அவரது ஆண் நண்பர் சுமித் பட்வால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சுபம் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறையினர், சிறுமி கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடர்ந்து பல முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், பாஜகவில் இருந்து அனாமிகா ஷர்மா நீக்கப்பட்டார். மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலேயே அவர் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என ஹரித்வார் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
Uttarkashi,Uttarakhand (Uttaranchal)
June 05, 2025 8:48 PM IST


