Last Updated:
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 27 பேர் காயம் அடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கு பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஜகா மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கின.
அதிர்வை உணர்ந்த மக்கள் அனைவரும் கட்டடங்களில் இருந்து வெளியேறி தெருக்களிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 27 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக பெருவின் இக்கா (Ica) பிராந்தியத்தில் உள்ள பாம்பா டி டேட் (Pampa de Tate) நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சரியாக பூமிக்கு அடியில் 56.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால், இக்கா நகரிலுள்ள சான் லூயிஸ் கோன்சாகா பல்கலைக்கழகத்தின் (San Luis Gonzaga University) கட்டிடங்கள் கணிசமாக சேதமடைந்தன. அண்டை மாகாணமான ஹுவான்கவெலிகா (Huancavelica) பகுதியிலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 21, 2026 10:26 AM IST


