Last Updated:
பெங்களூருவில் தனியார் விடுதியில் பெண் ஐடி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.
பெங்களூருவில் தனியார் விடுதியில் பெண் ஐடி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, விஷவாயு தக்கி அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் இளம்பெண் ரஞ்சிதா. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, நண்பரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள சென்றவர், சிக்மகளூர் தாலுகாவில் உள்ள ஹண்டி மச்சந்தனஹள்ளியில் தனியார் விடுதியில் தங்கி உள்ளார். அப்போது ரஞ்சிதா குளிக்கக் குளியலறைக்குச் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் விடுதி ஊழியர்களை வர சொல்லி தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் வர காலதாமதமானதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரஞ்சிதா மயக்கமடைந்த நிலையில், பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். உடனே அவரை மருத்துவமனை தூக்கி சென்று சிகிச்சை அளித்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆரம்பத்தில், மரணம் மர்மமாக கருதப்பட்டது. இருப்பினும், சமீபத்திய பிரேத பரிசோதனை அறிக்கை அவரது மரணத்திற்குப் பின்னால் உள்ள கொடூரமான உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
இந்நிலையில், கார்பன் மோனாக்சைடு என்ற விஷ வாயுவின் தாக்கத்தால், ரஞ்சிதா இறந்ததாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த வாட்டர் ஹீட்டரில் இருந்து வாயு கசிந்து, குளியலறையில் போதுமான காற்றோட்டம் இல்லாததால், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பது தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட விடுதியின் நிர்வாக அலட்சியமே ரஞ்சிதாவின் மரணத்திற்கு நேரடி காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ரஞ்சிதா தங்கி இருந்த விடுதியில் வாட்டர் ஹீட்டர் நிறுவும் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விடுதி உரிமையாளர் சுதாகர் மீது ஆல்டூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் சம்பவம் தொடர்பாக சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Bangalore,Karnataka


