Last Updated:
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையன், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஐ.டி. நிறுவனங்களில் தலைநகராக விளங்குகிறது. இதனால், கர்நாடகா மட்டும் இன்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பெங்களூருவில் தங்கி ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண்கள் பலரும் தனியார் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக சில தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அம்பலப்படுத்தும் வகையில் ஓர் அவலம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு கங்கோத்ரி பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்குள் இரவில் மூகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், சுவர் ஏறிக் குதித்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், அந்த நபர் சத்தமின்றி விடுதி முன்வாசல் வழியாக நுழைந்துள்ளார். பின்னர், அங்குள்ள அறைகளை ஒவ்வொன்றாக வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு பூட்டியுள்ளார். ஒரு அறையை தவிர, எஞ்சிய அறைகளை பூட்டி பின் அந்த ரூமுக்குள் நுழைந்துள்ளார்.
அங்கு, 23 வயதான இளம்பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, முகமூடிக் கொள்ளையன் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். தூக்கம் கலைந்து கண் விழித்து பார்த்த பெண், அங்கு கொள்ளையன் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன் என கத்தியை காட்டி மர்ம நபர் மிரட்டியுள்ளார். பின்னர், பெண்ணின் அறையில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
அப்போது, தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இளம்பெண் கொள்ளையனை தடுத்து நிறுத்த போராடியுள்ளார். ஆனால், கையில் ஆயுதம் வைத்திருந்த மர்ம நபர் அவரை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் அத்துமீறி நுழைதல், பாலியல் துன்புறுத்தல், திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து முகமூடி கொள்ளையனை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையன், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பணத்தை பறித்துக் கொண்டு ஓடியது பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
September 02, 2025 3:33 PM IST
பெண்கள் விடுதிக்குள் அதிகாலை திடீரென புகுந்த மர்ம நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. பெங்களூருவில் பகீர் சம்பவம்!


