Last Updated:
பெண் போன்று மாறு வேடத்தில் சென்று போலீஸ் ட்ரீட்மெண்டுக்கு ஆளானது ஏன்? நடந்தது என்ன?
தெலங்கானாவில் இளைஞர் ஒருவர் புர்கா அணிந்துகொண்டு பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு மத்தியில் அமர்ந்து அலப்பறை செய்து வசமாக வாங்கிக் கட்டியுள்ளார்.
காதலன் திரைப்படத்தில் வரும் காட்சியை போல் இளைஞர் ஒருவர் பேருந்தில் பயணம் மேற்கொள்வதற்காக புர்கா அணிந்து சென்று கையும் களவுமாக சிக்கியுள்ளார். போலீசில் மாட்டிக் கொண்டதும் வடிவேலு ரேஞ்சுக்கு சிரித்து மழுப்பி சமாளித்துள்ளார். இதனால், காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தங்க பாடம் புகட்டியுள்ளனர். வில்லங்கமான விளையாட்டில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி?.
தெலங்கானா மாநிலம் கொருட்லா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பெண்கள் காத்திருந்தனர். மிகவும் பிஸியாக காணப்படும் இந்த பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் உள்ளன. அங்கு பெண்கள் இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது, ஒருவர் மட்டும் புர்கா அணிந்தபடி நெளிந்து கொண்டுருந்தார். அவரின் நடை, உடை, அசைவுகள் பெண் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்துள்ளது. அதைக் கண்டு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
உடனே, அவரின் அருகில் சென்று நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டதும் அவரின் கால்கள் ஆட்டம் கண்டுள்ளன. மேலும் சந்தேகம் வலுத்ததும் நான்கைந்து பேர் சுற்றிவளைத்து கேள்விக் கணைகளை தொடுத்துள்ளனர். அப்போது, முகத்தில் போட்டிருந்த புர்காவை விலக்கியதும், அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். புர்கா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் இருந்த அந்த நபர் ஆண் என்பது தெரியவந்தது. ஏன், இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு சிரித்து மழுப்பியுள்ளார்.
அவரின் செயலை கண்டு கோபம் கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கும் சிரித்தபடியே சமாளித்ததால், போலீசார் தங்க பாடம் புகட்டியுள்ளனர். குற்ற செயலில் ஈடுபடுவதற்காக மாறு வேடத்தில் வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் சதித் திட்டத்துடன் வந்தாரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, பேருந்தில் இலவசமாக பயணம் மேற்கொள்ள வில்லங்கமான முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் உள்ளது. இதேபோன்று தெலங்கானாவில் ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக இளைஞர் ஒருவர் பெண் போன்று புர்கா அணிந்து அலப்பறை கூட்டியுள்ளார். 10 ரூபாய் டிக்கெட் எடுத்துச் செல்வதற்காக இப்படியும் செய்வார்களா? என்று பலரும் ஆச்சரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.


