Last Updated:
இண்டோர் ஸ்டேடியத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஸ்டேடியத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தரங்க வீடியோவைக் காட்டி பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற கேடி மீது கடும் நடவடிக்கை பாயுமா?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ளரங்க விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 6 முதல் 8ஆம் தேதி வரை மகளிருக்கான த்ரோபால் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை ஏராளமான பெண்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த நிலையில் த்ரோபால் போட்டியைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவருக்கு வீடியோ ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அதில், கோரமங்களா மைதானத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற இடத்தில், தனது தோழியை ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்த காட்சி இருந்தது. பின்னர், சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு Unknown நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
எதிர்முனையில் பேசியவர், இதுபோன்று தன்னிடம் ஏராளமான வீடியோக்கள் உள்ளதாக கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அவற்றை இணையத்தில் வெளியிட வேண்டாம் என்றால் தனக்கு பணம் தர வேண்டும் என்று டீல் பேசியுள்ளார். தவறும்பட்சத்தில் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, வீடியோவில் உள்ள தனது தோழிக்கு அந்தப் பெண் தகவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட 32 வயதான பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராவைப் பொருத்தி வீடியோ எடுத்த நபர், வேறு எந்த பெண்களையும் மிரட்டினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதைக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில், மற்ற பெண்களும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த இழிசெயலில் ஈடுபடுபவர் ஒருவர் தானா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இண்டோர் ஸ்டேடியத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka


