International
oi-Vigneshkumar
பாரிஸ்: இந்து மத அமைப்பை சேர்ந்த குழுவினர் ஈபிள் டவரை பார்வையிட வந்தபோது, அவர்களுடன் பெண்கள் தொடர்பு கொள்ளாத வகையில் பெண் ஊழியர்களை பணியில் இருந்து ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிள் டவர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் டவர் மூடப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஈபிள் டவர் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக இருப்பது ஈபிள் டவர். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள இது உலகின் மிக புகழ்பெற்ற கட்டுமானங்களில் ஒன்றாகும்.. இது 1889-ஆம் ஆண்டு பொறியாளர் குஸ்தாவ் ஈஃபிலால் கட்டப்பட்டது. இரும்பினால் ஆன இந்த கோபுரம் 330 மீட்டர் உயரமுடையது.

சுற்றுலா பயணிகள்
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை இந்த கோபரத்தை பார்க்கவே பாரிஸ் நகருக்கு வருகிறார்கள். இந்த உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தான் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது. அதாவது இந்து அமைப்பை சேர்ந்த சிலர் வந்த போது, பெண் ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஈபிள் டவர் மூடப்பட்டது.
சர்ச்சை
இதற்கிடையே ஈபிள் டவரை நிர்வகித்து வரும் SETE நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் பிஏபிஎஸ் (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) என்ற ஆன்மீக அமைப்பை சேர்ந்த குழுவினர் ஈபிள் டவரை பார்வையிட வந்தபோது, பெண்களுடனான தொடர்பை குறைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு என்றும், இதுபோன்ற நிபந்தனைகளை ஏற்றிருக்கூடாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என SETE தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஈபிள் டவர் ஊழியர்கள் வெளியிட்ட அறிக்கையில், பெண் ஊழியர்களை அவர்களின் பாலினத்தின் அடிப்படையில் பணியிலிருந்து ஒதுக்கியதாக குற்றம்சாட்டினர். குறிப்பிட்ட அந்த குழுவினரை வரவேற்பதற்காக, ஈபிள் டவரில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அவர்கள் கண்ணில் கூட படாத வகையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை ஏற்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர்.
புகார்
மேலும், சில பெண் ஊழியர்கள் தங்களது வழக்கமான பணியிடங்களில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினர். சில இடங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த குழுவினர் ஈபிள் டவரில் இருக்கும் வரை குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் செல்ல கூடாது எனவும் பெண் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பெண் ஊழியர்களை பாலினத்தின் அடிப்படையில் ஒதுக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த உத்தரவுகள் தங்களை அதிர்ச்சியடைய செய்ததாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்று கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
திறப்பு
இதை கண்டித்து ஈபிள் டவர் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில், ஈபிள் டவர் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும் என SETE நிறுவனம் தெரிவித்துள்ளது. மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என SETE நிறுவனமும் தெரிவித்துள்ளது.



