வறுமையில் வாடும் இளம் பெண்களுக்கு வசதியான வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுப்பதாக கலர் கலராக ரீல் விட்டு அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிய கும்பல்தான் இது. வேலைவாய்ப்பு அலுவலகம் போன்று நடத்தி, பலரை நம்ப வைத்து மோசடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சி போன்ற, பிறரின் உழைப்பை உறிஞ்சியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
உத்தரப்பிரதேச மாநிலம் போபாலில் பாக் செவானியா காவல் நிலையத்தில் 21 மற்றும் 32 வயதான பெண்கள் இருவர், புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலை தேடிவந்த தங்களை நம்பவைத்து இரு பெண்கள் ஏமாற்றியதுடன், அவர்களது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அதில், அப்பாஸ் நகரைச் சேர்ந்த அம்ரீன் மற்றும் அஃப்ரீன் ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும், அவர்களின் பிரதான தொழிலே நம்பிக்கை மோசடி செய்வதுதான் என்பதும் அம்பலமானது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வேலை தேடிவரும் பெண்களை குறிவைத்து காய் நகர்த்தியுள்ளனர்.
வீட்டு வேலை முதல் பல்வேறு பணிகளுக்கு படிப்புக்கேற்ப வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். மாத சம்பளமாக குறைந்தது 10 ஆயிரம் முதல், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் எனவும் அளந்துவிட்டுள்ளனர். அதை நம்பி ஏராளமான பெண்கள் கேடி சகோதரிகளின் மாய வலையில் விழுந்துள்ளனர்.
பின்னர், அவர்களில் சிலரை மிரட்டி, உருட்டி வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். ஒரு சிலரை பணக்கார ஆண்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மது, போதைப் பொருட்கள் உட்கொள்ள வைத்து இரவு பார்ட்டிகளுக்கு அனுப்பி இம்சை செய்துள்ளனர். தங்களது சொல் பேச்சு கேட்காத இளம்பெண்களை அடித்து, உதைத்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் டார்ச்சர் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் தங்களை நாடி வந்த பெண்களை குஜராத் மற்றும் மும்பைக்கு அழைத்துச் சென்று சீரழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டாய மதமாற்றம், பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அம்ரீன், அஃப்ரீன் அவர்களின் சகோதரர் ஜமால் மற்றும் சந்தன் யாதவ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஜன்னத் மற்றும் யாசிர் வாலாவை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்த சகோதரிகள், அப்பாஸ் நகரில் உள்ள சேரியில் இருந்து சாகர் ராயல் வில்லாவில் உள்ள ஆடம்பர குடியிருப்புக்கு குடியேறியுள்ளனர்.
அப்பாவி பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பாலியல் தொழிலில் தள்ளிய சகோதரிகள் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

