புதுடெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை சுமார் 40% குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கடந்த 2022 மே மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102- ஐ ஒட்டியும் டீசல் ரூ.94-ஐ ஒட்டியுமே நிலவி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இவற்றின் விலைகள் உயர்வது வழக்கம். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதிர்ச்சியால் கச்சா எண்ணெய் விலை உடனடியாக கடுமையாக உயர்ந்தது. ஆனாலும், ஜூன் 2022-ல் பீப்பாய் 112 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து இறங்கி, ஜூன் 2023-ல் 73 டாலர் என்கிற அளவுக்கு குறைந்திருக்கிறது. இது சுமார் 40% சரிவு ஆகும். ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இந்தநிலையில், 663 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் சமையல் எரிவாயு விலையை குறைத்து அறிவித்த நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலையும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 விற்கப்பட்டுவரும் நிலையில் ரூ.100-க்கு விற்கப்படும்.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.