Last Updated:
எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை முதன்முறையாக வென்றது.
இதையடுத்து இன்று பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், எதிர்பார்த்ததை விட மிக அதிகமானோர் பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சிலர் ஒருவருடைய தோள் மீது ஏற நேர்ந்தது. இன்னும் சிலர் பதட்டம் காரணமாக வெளியேற முயற்சித்த போது மற்றவர்கள் மீது ஏறி விழுந்தனர்.
இந்த அசம்பாவித சம்பவத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இருப்பினும், மைதானத்திற்குள் வீரர்களுக்கான பாராட்டு விழா விமரிசையாக நடந்து முடிந்தது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், பிசிசிஐ தரப்பிலிருந்து முதன்முறையாக அதன் துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த மாதிரியான அசம்பாவிதம் எந்த மாநிலத்திலும் நடக்கலாம் என்று தெரிவித்த ராஜு சுக்லா, அதற்காக அந்த மாநிலத்தை ஆளும் கட்சியைத் திட்டக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அசம்பாவிதம் ஏற்படும் என்பதை அறிந்து ரோட் ஷோ நடத்துவதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்த ராஜு சுக்லா, இன்றைக்கு ஏற்பட்ட நெரிசல் சம்பவம் யாரும் எதிர்பாராதது என்றும் கூறியுள்ளார்.
June 04, 2025 9:55 PM IST


