ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எழுச்சியுடன் வெற்றியை குவித்து வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வருங்கால கேப்டன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முற்றிலும் நம்பிக்கையற்ற அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இருந்தது. அந்த அணி தான் விளையாடிய முதல் 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. இதனால் அந்த அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அடுத்து நடந்த 5 போட்டிகளிலும் தொடர் வெற்றியை குவித்த பெங்களூரு அணி தற்போது 12 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 5-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் நன்றாக உள்ளதால் வரும் 18ம் தேதி நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு பெங்களூரு அணிக்கு பிரகாசமாக இருக்கும்.
இதனால் ஆர்.சி.பி-யின் வெற்றியை அதன் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஆர்.சி.பி.-யின் ஆட்டம் குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது-
சென்னை அணியில் தோனி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவர் களத்தில் இருப்பது மற்ற வீரர்களுக்கு உற்சாகத்தையும், பலத்தையும் அளிக்கிறது. அதே போன்று பெங்களூரு அணியில் விராட் கோலி முக்கிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்.
அவர் மற்ற வீரர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறார். கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரராக மாறியுள்ளார் விராட் கோலி. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல பெங்களூரு அணி கடுமையாக போராடுகிறது. ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரு அணியால் செல்ல முடியாமல் போனால், அடுத்த சீசனில் ஒரு இந்திய வீரரை கேப்டனாக அந்த அணிக்கு நியமிக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார். தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டூப்ளசிஸ் திறமையாக செயல்பட்டு வருகிறார். இவர் முன்னதாக சென்னை அணிக்காக விளையாடியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)