குவாந்தான்:
இன்று அதிகாலை ஜாலான் குவாந்தான்-சிகாமாட் (Jalan Kuantan-Segamat) சாலையில் நேரிட்ட பயங்கரக் கார் விபத்தில், குவாந்தான் மாவட்டக் காவல் தலைமையகத்தில் (IPD Kuantan) பணியாற்றி வந்த காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் அவர்களது நான்கு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.
பெக்கான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் முகமட் ஜைடி மாட் ஜின் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இக்கோர விபத்து இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில், ஜாலான் குவாந்தான்-சிகாமாட் சாலையின் 76-ஆவது கிலோமீட்டரில் நடந்துள்ளது.
இன்ஸ்பெக்டர் ஷா லோக்மான் லுட்சா ராம்லி (Insp Syah Lokman Ludza Ramli – வயது 50). இவர் குவாந்தான் மாவட்டக் காவல் தலைமையகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட போலீஸ் விசாரணையின்படி, இன்ஸ்பெக்டர் ஷா லோக்மான் ஓட்டி வந்த செடான் (Sedan) ரக கார் குவாந்தானில் இருந்து நெகிரி செம்பிலான், ஜெம்போல் (Jempol) நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில், எதிர்த்திசையில் ஜோகூர், கெலாங் பத்தாவிலிருந்து திரெங்கானு நோக்கி ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, இன்ஸ்பெக்டர் ஓட்டி வந்த செடான் கார் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து (Lost Control), திடீரென எதிர்த்திசைப் பாதைக்குள் பாய்ந்து, அங்கு வந்த ஹேட்ச்பேக் காரின் மீது மிகக் கொடூரமாக மோதியது.
விபத்துக்குள்ளான காரில் இருந்த இன்ஸ்பெக்டரின் 10 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகளும் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒரு பிள்ளையின் இடது கால் முற்றிலும் முறிந்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது முவாட்சாம் ஷா மருத்துவமனையில் (Muadzam Shah Hospital) அவசரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹேட்ச்பேக் காரை ஓட்டி வந்த 26 வயது இளைஞர் லேசான காயங்களுடன் தப்பினார். எனினும், அவருடன் பயணித்த அவரின் 26 வயது மனைவியான 22 வாரக் கர்ப்பிணிப் பெண் படுகாயமடைந்து, அதே மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இச்சம்பவம் குறித்து, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் (அலட்சியமாக வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்துதல்) பெக்கான் மாவட்டப் போக்குவரத்துப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த 4 பிள்ளைகளின் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




