India
oi-Hema Vandhana
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பெண் தொழிலாளியை புலி தாக்கியிருக்கிறது.. இதனால் புலியிடமிருந்து தப்பித்து கொள்ள பெண் தொழிலாளி ஓடியிருக்கிறார்.. ஆனால், புலி அவரை விடவில்லை.. புல் வெட்டும் பணிக்காக தொழிலாளர்கள் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆரவள்ளி மலைத்தொடர் பகுதியில் நஹர்கர் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஜெய்ப்பூர் பார்க்
இங்கு சுகுனா தேவி என்ற பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் மின்சாரம் தாக்கி பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் இப்போதைக்கு சுகுனா தேவியின் வருமானத்தில்தான் குடும்பம் ஓடுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பூங்காவில் உள்ள 16-வது அடைப்புப் பகுதியில் சுகுனா தேவி உள்பட 6 முதல் 7 பெண்கள் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலையில் அந்த புற்களை சேகரிக்க சுகுனா தேவி சென்றிருக்கிறார்.. அப்போது திடீரென புலி தாக்கி இவரை குதறியெடுத்துள்ளது.
சுகுனாதேவி அலறல்
வழக்கமாக துப்புரவுப் பணிகள் மற்றும் இதர வேலைகள் செய்ய போகிறார்கள் என்றால், அதற்கு முன்கூட்கடியே பாதுகாப்பு கருதி அங்குள்ள “சிவாஜி” என்ற புலி வேறு கூண்டுக்கு மாற்றிவிடுவார்களாம். அதற்கு பிறகே தூய்மைப்பணியாளர்கள் அங்கு செல்வார்கள்..
ஆனால்,. ஹன்சா என்ற பணியாளர், உள்ளே பெண்கள் இருப்பதை அறியாமல், புலி இருந்த அதே அடைப்பின் கதவை தவறுதலாக திறந்துவிட்டுள்ளார். அடைப்புக்குள் புலி இருப்பதை அறியாமல் உள்ளே நுழைந்த சுகுனா தேவி மீது சிவாஜி புலி திடீரென பாய்ந்து கொடூரமாக தாக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் உயிர் தப்பிக்க அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள்.
மரங்களில் ஏறிய பெண்கள்
சிலர் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்த வேலி மீது ஏறியிருக்கிறார்கள்.. சிலர் மரங்களின் மீதும் ஏறி உயிர் தப்பியிருக்கிறார்கள். சுகுனா தேவியும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அவர் வேலியை ஏற முயன்றபோது புலி அவரை கீழே இழுத்து தாக்கியிருக்கிறது..
இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தர முயன்றுள்ளனர்.. ஆனால், அந்தப் பகுதியில் மொபைல் நெட்வொர்க் பிரச்சினை இருந்ததால் வனத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.. இதற்கு பிறகுதான் தகவலறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து, மயக்க மருந்து செலுத்தி புலியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சிவாஜி புலி
அத்துடன், மரங்கள் மற்றும் வேலியில் தப்பியிருந்த பெண்களை பாதுகாப்பாக மீட்டனர்… படுகாயமடைந்த சுகுனா தேவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
பாதுகாப்பு குறைபாடு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியம்தான் மேற்கண்ட விபத்திற்குக் காரணம் என்று சொல்லி, கிராம மக்களும் உறவினர்களும் பூங்காவின் நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்ல, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டார்கள்.. இதனையடுத்து, மாவட்ட வனப்பாதுகாப்பு அலுவலர் ஆஷிஷ் வியாஸ், போலீஸ் அதிகாரி பியூஷ் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ பிரசாந்த் சர்மா ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..
இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அவசர நிவாரணமாக உடனடியாக ரூ. 10 லட்சம் வழங்குவது குறித்தும், குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு வனத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்குவது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், நிரந்தர அரசு வேலை மற்றும் கூடுதல் நிவாரணம் கோரும் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசாரும் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


