Last Updated:
புனே நகரில் 26 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி தத்தாத்ரே ராம்தாஸ் காடே, நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
புனே நகரில் உள்ள சுவர்கேட் பேருந்து நிலையத்திற்கு கடந்த 25-ம் தேதி அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்துள்ளார். சத்தாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பால்தானுக்கு செல்வதற்காக வந்த அந்த பெண்ணை மர்மநபர் ஒருவர் அணுகியுள்ளார். தன்னை பேருந்து நடத்துநர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தான் செல்லும் பேருந்து மற்றொரு பிளாட்பாரத்தில் நிற்பதாக கூறி இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாரத்தில் நின்றிருந்த குளிர்சாதன பேருந்தில் இளம்பெண்ணை, மர்ம நபர் ஏறுமாறு கூறியிருக்கிறார்
யாருமே இல்லாத அந்த பேருந்தில் இளம்பெண் ஏறி அமர்ந்ததும் பின்னால் சென்ற அந்த மர்ம நபர், அவரை மிரட்டி பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடியிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையத்தில் நடந்த இந்த கொடுமையான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். 2012-ல் டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுயை நினைவுப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். யாராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர், புனே மாவட்டம் சிரூர் தாலுக்கா குனட் கிராமத்தை சேர்ந்த 36 வயதான தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்பது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கில் சர்ச்சை கருத்து… மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்
குற்றவாளி ராம்தாஸ் காடே பலாத்காரத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச்செல்லும் காட்சி பேருந்து நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அவரை பிடிக்க போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதனிடையே ராம்தாஸ் காடே பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் அம்பலமானது. குற்றவழக்குகளில் சிக்கி சிறை சென்றவர் 2019-ம் ஆண்டு முதல் ஜாமீனில் வெளியில் இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் நூற்றுக்கணக்கான போலீசார் ராம்தாஸ் காடேயின் சொந்த கிராமத்துக்கு சென்றனர். இதனால் அந்த கிராம மக்கள் மத்தியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. போலீசாருடன் கிராம மக்களும் குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் இணைந்து கொண்டனர். கிராமப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் குற்றவாளி பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் ட்ரோனை பறக்கவிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் ராம்தாஸ்காடேயின் உறவினர்கள், மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். குற்றவாளி பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ராம்தாஸ் காடே, ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஒரு நபரிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். அந்த நபர் ராம்தாஸ்காடேயை அடையாளம் தெரிந்து கொண்டதும், சத்தம் காட்டாமல் போலீசாருக்குத் தகவல் கொடுத்து விட்டார். ரகசியத் தகவலின்பேரில் அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் குற்றவாளியை சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர். அவரை அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை கிடைக்க மாநில அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
Pune,Maharashtra
February 28, 2025 9:08 PM IST
500 போலீசார், 400 கிராம வாசிகள், மோப்ப நாய்கள், ட்ரோன்கள்… பாலியல் குற்றவாளி சிக்கியதன் பரபரப்பு பின்னணி!


