பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காலை புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்த பிரதமர் மோடி, புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் மேற்கொண்டார்.
பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 38.2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

