கோலாலம்பூர்:
சிலாங்கூர், சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 76 மாணவர்களை, அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இரண்டு தற்காலிக நிவாரண மையங்களிலிருந்து சுபாங் ஜெயா பகுதியைச் சுற்றியுள்ள 19 பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஐந்து Rapid KL On-Demand வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் 76 மாணவர்களில், 42 பேர் தொடக்கப்பள்ளி மாணவர்கள், 34 பேர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அடங்குவர் என்றும், மாணவர் போக்குவரத்து செயல்முறை சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட கல்வி அலுவலகம் (பிபிடி) மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக Rapid Bus நிறுவனத்தின் மத்திய பிராந்திய தலைவர் கைருல் அசார் ஹமிதுலா கூறினார்.
“அந்த எண்ணிக்கையில், 60 பேர் காலை நேர பள்ளி அமர்வு மாணவர்கள், 16 பேர் பிற்பகல் அமர்வு மாணவர்கள். இருப்பினும், இன்று காலை மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது என்றும், இது காலப்போக்கில் அதிகரிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும்,” அவர் கூறினார்.


