Last Updated:
தர்மஸ்தலா கோயிலில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 13 இடங்களில் தோண்டும் பணி தொடங்கியது.
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலா கோயிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் ஒரு இடத்தில் தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் எவ்வித உடலும் கண்டெடுக்கப்படவில்லை.
கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் தர்மஸ்தலா. இக்கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மைப் பணியாளர் கடந்த ஜூன் மாதம் தட்சின கன்னடா காவல்நிலையத்தில் சரணடைந்து அளித்த வாக்குமூலம், ஒட்டுமொத்த கர்நாடகாவையே கதிகலங்க வைத்தது. 1995-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை, தர்மஸ்தலா கோயிலில் பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி, கோயில் நிர்வாகத்தினர் தன்னை கட்டாயப்படுத்தியாக கூறி அவர் அதிர வைத்தார்.
அப்படி, புதைக்கப்பட்ட பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் தென்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். உண்மையிலேயே தர்மஸ்தலா கோயிலை சுற்றி பெண்களின் உடல்கள் புதைப்ட்டனவா? என பலரும் கேள்வி எழுப்ப, இவ்விவகாரம் கர்நாடகாவில் காட்டுத்தீயாய் பரவியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தர்மஸ்தலா கிராமத்தின் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஆய்வு நடத்தியது. அதனை தொடர்ந்து, ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டும் பணியை கர்நாடக காவல்துறை தொடங்கியுள்ளது. தர்மஸ்தலா குளத்தை தவிர்த்து, நேத்ராவதி ஆற்றுக்கு அருகிலுள்ள ஒரு வனத்தில் 13 இடங்களில் குறி வைத்து உடல்களை தோண்டி எடுக்கும் பணியை சிறப்பு புலனாய்வு குழு தொடங்கியுள்ளது. பிற்பகல் 12.15 மணியளவில் வனத்தில் அடையாளம் காணப்பட்ட 13 இடங்களில் முதல் இடத்தில் தோண்டும் பணி தொடங்கப்பட்டது.
2 மணி நேரம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோண்டும் பணி நீண்ட நேரம் நீடித்தது. கனமழை குறுக்கிட்டதால் தோண்டும் பணியில் சிக்கல் எழுந்தது. 2 அல்லது 3 அடி தோண்டுவதற்கு முன்பே தண்ணீர் தேங்கியதால் சுணக்கம் ஏற்பட்டது.
இருப்பினும், முதல் நாளில் எவ்வித உடலும் கண்டெடுக்கப்படவில்லை. வழக்கின் சாட்சியாக இருக்கும் முன்னாள் ஊழியரையும் நேரில் அழைத்து வந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளன. தோண்டும் பணி முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தால் தர்மஸ்தலாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
July 30, 2025 10:13 AM IST