புது கார் வாங்க போறீங்களா.. மாருதி சுசூகி சொன்ன முக்கிய விஷயம்!
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் ஆகஸ்ட் மாதம் முதல் தனது கார்களின் விலையை மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப 30000 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பொதுவாக உற்பத்தி செலவுகளை தாண்டி லாப மார்ஜின் + Buffer விலை அளவீட்டை வைத்திருக்கும், அதன் அடிப்படையில் தான் கார்களை விற்கும். ஆனால் கடந்த 4 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் விலை மட்டும் அல்லாமல் பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக Buffer அளவு குறைந்து விலை உயர்த்த வேண்டிய நிலைக்கு மாருதி சுசூகி தள்ளப்பட்டு உள்ளது, இதன் விளைவாகவே 30000 ரூபாய் அளவில் விலையை உயர்த்துகிறது.
இதுக்குறித்து மாருதி சுசூகி கூறுகையில், கடந்த சில மாதங்களாக உற்பத்தி விலையில் இருந்த பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு மாற்றாமல் வைத்திருக்க பல்வேறு செலவின குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் விலை உயர்வின் தாக்கத்தை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கடந்தாமல் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே கடத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் மாருதி சுசூகி கார்களின் விலைகள் அனைத்தும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி இந்திய கார் விற்பனை சந்தையில் பெரும் பங்கு வைத்திருக்கும் நிறுவனமாகும், இந்நிறுவனத்தின் அறிவிப்பு மற்ற நிறுவனங்களையும் விலையை அதிகரிக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்தடுத்து அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் விலையை உயர்த்தினால் புதிதாக கார் புக் செய்தவர்கள், டெலிவரி எடுக்காத நபர்கள் தங்களுடைய புதிய காருக்கு கூடுதல் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.
