பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திசைமுகப்படுத்தல் செயலமர்வு 2024 நவம்பர் மாதம் 25, 26, 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01இல் இடம்பெறவுள்ளதாக, பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையான இந்த வழிகாட்டல் செயலமர்வானது, இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், ஆளும் கட்சியின் முதற்கோலாசான், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.
மேலும், பாராளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், அந்தந்தப் பிரிவுகளின் மூலம் பாராளுமன்றச் செயற்பாடுகளில் உறுப்பினர்களின் பங்களிப்புகள் மற்றும் பணிகள் குறித்து உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
The post புதிய எம்.பிக்களுக்கு பாராளுமன்றம் தொடர்பில் வழிகாட்டல் appeared first on Thinakaran.


