கோலாலம்பூர் | மார்ச் 12, 2026:
ஸ்ரீ கெம்பாங்கான் அருகே உள்ள புஞ்சாக் ஜாலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீ, தற்போது 2 ஹெக்டேர் (சுமார் 5 ஏக்கர்) பரப்பளவிற்குப் பரவியுள்ளது.
மாலை 4:12 மணியளவில் இந்தத் தீ விபத்து முதலில் கண்டறியப்பட்டது. அப்போது சுமார் 0.3 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே தீ எரிந்து கொண்டிருந்தது.
வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக, இரவு 9 மணி நிலவரப்படி தீயானது 2 ஹெக்டேர் பரப்பிற்கும் மேலாகப் பரவியுள்ளது.
இதுவரை உயிரிழப்புகளோ அல்லது வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்களுக்குச் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் விடுத்துள்ள தகவலின்படி, ஸ்ரீ கெம்பாங்கான், சைபர்ஜெயா, பூச்சோங், சுபாங் ஜெயா மற்றும் பெஞ்சாலா ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 27 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்தில் தயார் நிலையில் உள்ளன.
தீ பரவியுள்ள இடத்திற்கும் அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் இடையே 150 மீட்டர் இடைவெளி உள்ளது. அவற்றுக்கு இடையே ஒரு பெரிய வடிகால் (Drain) அமைந்திருப்பது பாதுகாப்பை அளிக்கிறது. இருப்பினும், தீ வீடுகளுக்குப் பரவாமல் இருக்கத் தற்போது ‘ஃபயர்பிரேக்’ (Firebreak) எனப்படும் தீத் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோலாலம்பூர் – புத்ராஜெயா விரைவுச்சாலையை (MEX Highway) ஒட்டிய மலைப்பகுதியில் இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளதால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்குத் தீப்பிழம்புகள் தெளிவாகத் தெரிகின்றன. புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.




