கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கடந்த மாதம் கைது செய்த இரு முன்னாள் இராணுவ புலனாய்வு (Military Intelligence) அதிகாரிகள், நேற்று மேற்கொள்ளப்பட்ட புகை, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல் கும்பலின் மீது நடத்தப்பட்ட அதிரடி சோதனையுடன் தொடர்புடையவர்கள் என போலீசார் சந்தேகிக்கப்படுகின்றனர்.
MACC அதிகாரிகள், Ops Sikaro எனப்படும் இந்த விசேட நடவடிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் உள்ள 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் புகைபொருட்கள் தனியார் களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டு, பின்னர் நாட்டின் பல பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுங்கச் சாவடிகள் வழியாக பொருட்களை எளிதாக அனுமதித்தல், களஞ்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்கல், மற்றும் சுங்க குறியீடுகள், பொருள் விவரங்களை போலி ஆவணங்களில் மாற்றுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் சில அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் MACC விசாரித்து வருகிறது.
இந்த சட்டவிரோத வணிகத்தின் காரணமாக, 2020 முதல் 2024 வரை அரசு வருவாயில் RM250 மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என MACC கூறியுள்ளது.
MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, “நாட்டின் கட்டுப்பாட்டு அமைப்புகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும் எந்த நபருக்கும் கருணை அல்லது சலுகை காட்ட மாட்டோம்; சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
முன்னதாக, Ops Sohor எனும் மற்றொரு நடவடிக்கையில், தெற்கு பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஐந்து மூத்த இராணுவ அதிகாரிகள், இரு முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் (தற்போது ஆன்லைன் மீடியா செய்தியாளர்கள்), ஒரு நிறுவன மேலாளர், மலேசிய மருத்துவ சங்கத்தில் பணியாற்றும் நிர்வாக உதவியாளர் மற்றும் ஒரு வெளிநாட்டு பெண் ஆகியோர் அடங்குவர்.




