Last Updated:
பழமையான தமிழ் மொழியை மத்திய அரசு நாட்டின் பொக்கிஷமாகவே கருதுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து.
எந்த மொழியையும் யார் மீதும் திணிப்பது தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் அல்ல என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால் தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடியை இழப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதியை விடுவிக்கச் செய்ய தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மாநில அரசுகள் அரசியலைக் கடந்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பழமையான தமிழ் மொழியை மத்திய அரசு நாட்டின் பொக்கிஷமாகவே கருதுவதாக தெரிவித்துள்ள தர்மேந்திர பிரதான், நாட்டின் பன்மொழி பாரம்பரியத்தை மதிப்பது தான் தேசிய கல்வி கொள்கையின் பிரதான எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அனைவரும், தங்களின் தாய்மொழியிலேயே தரமான கல்வியை பெற இந்த கொள்கை வழிவகுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் கல்வி முறையால் தாய்மொழியில் கல்வி கற்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மட்டுமின்றி இந்திய மொழிகளில் கல்வி கற்பிப்பதை பலப்படுத்துவது தான் தேசிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே குறுகிய பார்வையோடு இதனை மாநில அரசு அணுக கூடாது என மத்திய அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதையும் படிக்க: “நிலத்தை கைப்பற்ற மொழி அழிப்பே சிறந்த வழி” – துணை குடியரசு தலைவர் கருத்துக்கு கனிமொழி பதில்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எழுதி உள்ள கடிதம் கூட்டாட்சி தத்துவத்தை மறுக்கும் வகையில் இருந்ததாகவும், எந்த மொழியையும் திணிக்க வேண்டும் என தேசிய கல்வி கொள்கையில் கூறப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால் தமிழ்நாடு அரசு ரூ.5000 கோடியை இழப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத பல மாநிலங்களில் கூட தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனை ஏற்க வலியுறுத்துவதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
February 22, 2025 8:08 AM IST
“பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதால் தமிழ்நாடு ரூ.5000 கோடி இழக்கிறது” – அமைச்சர் தர்மேந்திர பிரதான்


