Last Updated:
பி.ஆர்.எஸ் கட்சியில் இருந்து கே.சந்திரசேகரின் மகள் கவிதா கட்சி கட்டளையை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்களில், சந்திரசேகர ராவும் ஒருவர். 2001ல் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலங்கானா உருவானதும், முதல்வராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்று, 2023 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார்.
இதனைத்தொடர்ந்து தேசிய அரசியல் ஆசை ஏற்பட கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார். மாநிலத்தில் ஆட்சி பறிபோன பிறகு கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவ் – அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. மேலும் சகோதரர் ராமாராவுடனும் மோதல் வெடித்தது. இதனையடுத்து, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து கவிதா பேச துவங்கினார்.
மேலும் கட்சியின் தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார். இந்நிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து மகள் கவிதா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
September 02, 2025 2:51 PM IST


