புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அதேநேரம், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் ஆஜராகி, ‘‘தேர்தல் ஆணையத்தின் இந்த திருத்தப் பணியால் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், பெண்களும், தாழ்த்தப்பட்டோரும் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்’’ என்றும் வாதிட்டனர்.
இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும், பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.