காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியிடம் போய்ச் சொல் என கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணிடம், தீவிரவாதி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த பல்லவி என்ற பெண், தனது கண்முன்னே கணவர் மஞ்சுநாத்தைப் பறிகொடுத்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தானும், கணவர் மஞ்சுநாத் மற்றும் மகன் அபிஜயாவும் சுற்றுலாவுக்கு பஹல்காம் வந்ததாகவும், பிற்பகல் 1.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் தன் கண்முன்னே கணவர் மஞ்சுநாத் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். மேலும், நாங்கள் இந்துக்கள் என்பதை உறுதிசெய்த பிறகு, அவர்கள் கணவரைக் கொன்றபோது, தன்னையும் தனது மகனையும் சுட்டுக் கொன்று விடுமாறு தீவிரவாதிகளிடம் கெஞ்சியதாகவும், அதற்கு அந்த தீவிரவாதிகளில் ஒருவர், “நான் உன்னை கொல்ல மாட்டேன்.. இங்கே நடந்ததை உங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் சொல்” என கூறியதாகவும் பல்லவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த துயரமான நேரத்தில் அருகில் இருந்த காஷ்மீர் இளைஞர்கள் தன்னையும் தனது மகனையும் காப்பாற்றியதாக பல்லவி உருக்கமாக கூறியுள்ளார். ஊடங்களிடம் பேசிய பல்லவி, “மூன்று காஷ்மீர் இளைஞர்கள் வந்து எங்களைக் காப்பாற்றினர். எங்களைக் காப்பாற்றும் போது, அவர்கள் பிஸ்மில்லாஹ் பிஸ்மில்லாஹ் என்று கோஷமிட்டு, எங்களை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இனி எனக்கு அந்நியர்கள் அல்ல. அவர்கள் என் சகோதரர்கள்.” என உருக்கமாக கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மஞ்சுநாத்தும் அவரின் மனைவி பல்லவியும் தங்களது மகன் நல்ல மதிப்பெண் பெற்றால் சுற்றுலா அழைத்துச் செல்வதாக உறுதியளித்திருகின்றனர். அதன்படி, அவர்களின் மகன் அபிஜய் தேர்வில் 98% மதிப்பெண் பெற்றதை அடுத்து குடும்பத்துடன் காஷ்மீர் வந்திருக்கின்றனர். வந்த இடத்தில் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.
இதற்கிடையே, இந்தத் தாக்குதலில் இந்துக்களை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முஸ்லிம் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் அனந்த்நாக்கை சேர்ந்த சையத் ஹுசைன் ஷா என்பவர் உயிரிழந்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 23, 2025 10:14 AM IST
Pahalgam Attack | “அவர்கள் அந்நியர்கள் அல்ல.. என் சகோதரர்கள்” – பெண்ணின் குடும்பத்தை காப்பாற்றிய காஷ்மீர் இளைஞர்கள்!

