
பிரித்தானியாவில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரைச் சேர்த்து மொத்தம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதக் கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராக பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சிறுவர் ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் முன்னெடுத்த பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் முகவரகமும் இணைந்து செயல்பட்டது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 30 வயதுடைய இலங்கையர் லிவர்பூல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அந்த நபரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

