பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு 6 மற்றும் 7ஆம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் உறுப்பு நாடுகளாக உள்ளன.
இதன் உச்சி மாநாடு 6ஆம் தேதி பிரேசிலில் தொடங்கியது. இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நேரடியாக பங்கேற்கவில்லை. சீன அதிபருக்கு பதிலாக சீனாவின் பிரதமர் லி கியாங் பங்கேற்றார். அதேபோல், ரஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக பங்கேற்றார்.
காணொளி வாயிலாக மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஷ்ய அதிபர் புதின், “தேசிய நாணயங்களின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவது அவசியம். பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒரு தனி தீர்வு மற்றும் வைப்புத்தொகை முறையை உருவாக்குவது, நாணய பரிவர்த்தனைகளை வேகமாகவும், திறமையாகவும், பாதுகாப்பாகவும்.
நமது நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் தேசிய நாணயங்களின் பயன்பாடு சீராக வளர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டில், மற்ற பிரிக்ஸ் நாடுகளுடனான ரஷ்யாவின் தேசிய நாணயம், ரூபிள் மற்றும் நட்பு நாடுகளின் நாணயங்களின் பங்கு 90 சதவீதமாக இருந்தது.
பிரிக்ஸ் வழிமுறைகள் மற்றும் முதன்மையாக புதிய மேம்பாட்டு வங்கி மூலம் சங்கத்தின் உறுப்பு நாடுகளின் பரஸ்பர மூலதன முதலீடுகளின் அளவை அதிகரிக்கும் பணியும் பொருத்தமானதாகத் தெரிகிறது. இந்த நோக்கங்களுக்காக, ரஷ்யா ஒரு புதிய பிரிக்ஸ் முதலீட்டு தளத்தை உருவாக்க முன்மொழிந்துள்ளது. நமது நாடுகளின் பொருளாதாரங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளிலிருந்து நிதிகளை ஆதரிப்பதற்கும், ஒப்புக்கொள்ளப்பட்ட கருவிகளை கூட்டாக உருவாக்குவதே இதன் யோசனை. பிரிக்ஸ் நாடுகள் அரசியல் மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் கலாச்சாரம், மனிதாபிமானத் தொடர்புகள் ஆகியவற்றின் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துகின்றன” என பேசியிருந்தார்.
உலகின் பல்வேறு நாடுகள், குறிப்பாக, பிரிக்ஸ் நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. அதேசமயம், கடந்த 2023ஆம் ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய நாணயத்தை வர்த்தகத்திற்காக அறிமுகம் செய்ய வேண்டும் என பிரேசில் அதிபர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் இந்த ஆண்டு நடந்த மாநாட்டிலும் அதுகுறித்து பேசப்பட்டது.
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரிக்ஸ் மாநாடு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, “உலகம் மாறிவிட்டது. நமக்கு பேரரசர் வேண்டாம். நமது நாடுகள் இறையாண்மை கொண்டவை. டிரம்ப் வரிகளை விதித்தால், மற்ற நாடுகளும் அதையே செய்ய உரிமை உண்டு. பரஸ்பர சட்டம் உள்ளது. அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் ஜனாதிபதி சமூக ஊடகங்களில் வரிகளை விதித்து உலகை அச்சுறுத்துவது பொறுப்பற்றது என்று நான் நினைக்கிறேன். உண்மையைச் சொன்னால், அமெரிக்காவின் அளவுள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி மற்ற நாடுகளுடன் பேசுவதற்கு வேறு மன்றங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
July 08, 2025 9:50 PM IST
பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்… தகுந்த பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்

