இந்திய கடற்படை தற்போது ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட Mikoyan MiG-29K ரக நான்காம் தலைமுறை போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப மற்றும் நம்பகத்தன்மை சிக்கல்கள் காரணமாக இந்த விமானங்களை படிப்படியாக குறைத்துக்கொள்ள இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இவற்றிற்குப் பதிலாக, பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தரப்பில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், கடற்படை துணை தலைமை தளபதி சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, 26 ரஃபேல்-எம் விமானங்களையும் Dassault Aviation நிறுவனம், 2031-ஆம் ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்கும். இதில், 22 ஒற்றை இருக்கை விமானங்களும், நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களும் அடங்கும்.
இந்த ஒப்பந்தம், 50 சதவிகித ஆஃப்செட் விதியைக் கொண்டுள்ளதால், டசால்ட் ஏவியேஷன் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும். இதன்மூலம் உள்நாட்டுத் தயாரிப்புக்கும் வழிவகுக்கும்.
மேலும், விமானங்களின் பராமரிப்பு, தளவாட ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றையும் Dassault Aviation நிறுவனம் வழங்கும். ரஃபேல்-எம் போர் விமானங்கள், உலகின் மிகச்சிறந்த கடற்படை விமானங்களாக கருதப்படுகின்றன. தற்போது, இந்த வகை விமானங்கள் பிரான்ஸ் நாட்டு கடற்படையிடம் மட்டுமே உள்ளன. ரஃபேல்-எம் போர் விமானங்கள், விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களிலிருந்து இயங்கக் கூடியவை. துல்லியத் தாக்குதல், வான் பாதுகாப்பு மற்றும் உளவுப் பணிகளைச் செய்வதில் திறமை வாய்ந்தவை.
இஸ்ரேலிய ஹெல்மெட் பொருத்தப்பட்ட டிஸ்ப்ளேக்கள், ரேடார் எச்சரிக்கை ரிசீவர்கள், மடக்கக்கூடிய இறக்கைகள், லோ பேண்ட் ஜாமர்கள், 10 மணி நேர விமான தரவு பதிவு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை கொண்ட திறமையான மின்னணு போர் அமைப்பாகும்.
இதையும் படிக்க: சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்… பஹல்காம் தாக்குதலில் ஜிப்லைன் ஆப்ரேட்டரிடம் என்ஐஏ விசாரணை ஏன்?
ரஃபேல்-எம், வானிலிருந்து வானிற்கும், வானிலிருந்து தரைக்கும் ஏவப்படும் ஏவுகணைகள், SCALP ஏவுகணைகள், Exocet கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை சுமக்கும் திறனைக் கொண்டுள்ளது.
மேலும் 9,500 கிலோ வெளிப்புற சுமையைச் சுமந்து செல்லக் கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட INS விக்ராந்த்திலிருந்து ரஃபேல்-எம் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. INS விக்ராந்த்திலிருந்து 26 விமானங்களை மட்டுமே இயக்க முடியும் என்பதால், இந்திய அரசு 26 ரஃபேல்-எம் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இந்திய விமானப் படை, பிரான்ஸ் நாட்டிடமிருந்து ஏற்கனவே வாங்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
April 29, 2025 8:19 AM IST

