Last Updated:
பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, அதிபர் மேக்ரானுடன் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தலைமை வகிக்கிறார். இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரண்டு நாடுகள் பயணத்தின் முதற்கட்டமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் அதிபருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி இன்று தலைமை வகிக்கிறார்.
பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். தனி விமானம் மூலம் சென்ற பிரதமர், மழைக்கு நடுவே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தரையிறங்கினார். அவருக்கு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்புடன் அரசு முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாரீஸில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு மேள தாளங்கள் முழங்க “ஹரே ராம ஹரே கிருஷ்ணா” பாடல் பாடி இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அளித்த இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரான்ஸ் அரசின் உயரதிகாரிகள், மாகாண பிரதிநிதிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பாரீஸில் இன்று நடைபெறும் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டிற்கு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். மாநாட்டின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
மாநாட்டை தொடர்ந்து அதிபர் மேக்ரானுடன் கூட்டாக இணைந்து இந்தியா – பிரான்ஸ் நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதன்பின், இந்தியா – பிரான்ஸ் இடையே உயர் மட்ட அளவிலான ஒப்பந்தங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து உயர்மட்டக் குழு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து மார்செய்ல்லே (Marseille) செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வழங்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். மார்செய்ல்லே நகரில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு நாளை செல்லும் பிரதமர் மோடி மற்றும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து மார்செய்ல்லே-வில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக திறந்து வைக்கின்றனர்.
Also Read | திமுக, அதிமுகவுக்கு சவாலான மாநிலங்களவை எம்.பி. தேர்தல்.. யாருக்கெல்லாம் வாய்ப்பு?
அங்கிருந்து புறப்பட்டு Cadarache சென்று அங்குள்ள ஐரோப்பாவின் பெரிய அணுசக்தி பரிசோதனை நிலையத்தை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அத்துடன் பிரான்ஸ் பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று செல்லும் பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சு நடத்துகிறார். அப்போது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றிய விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 11, 2025 7:12 AM IST
பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. பாரிஸில் பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்!


