இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரான்ஸ், இங்கிலாந்து அறிவித்து உள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க போவதாக கனடா, மால்டா ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது:-
“மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும். இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம்.
இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டு உள்ளது. ஐ.நா சபையில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி தொடங்கும் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம்.
அங்கு 2026-ம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும். அதில் ஹமாஸ் அமைப்பு எந்தப் பங்கையும் வகிக்க கூடாது. மேலும் பாலஸ்தீன அரசை ராணுவமயமாக்க வேண்டும்” என்றார்.
மால்டா வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் கட்டஜார் கூறும்போது, “பாலஸ்தீன மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை மால்டா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இரு நாடு தீர்வு என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இதனால் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கொள்கைரீதியான முடிவை மால்டா அரசாங்கம் எடுத்துள்ளது” என்றார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடாவின் முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.